பல நூறு தமிழ்ச் சொற்களின் வரையறைகள் வரிசையில்- ஐந்திரம்!


நிறைய தமிழ்ச் சொற்களை, அதன் பொருள் பொதிந்த வரையறைகளை, பிராமணியம், ஐரோப்பியம், மார்க்சியம், வேறுவேறு மதங்கள் என்று பல்வேறு அயல்சார்புகளில் மலைப்புகளில், தொலைத்து விட்டு, நாம் நீர்த்துப் போன வடிவங்களாக அச்சொற்களைக் கையாண்டு வருகிறோம். ஒவ்வொரு சொல்லாக வரையறை மீட்பதற்கானது இந்தக் கட்டுரை

'ஐந்திரம்' என்ற சொல்லின் வரையறையை இந்தக் கட்டுரையில் முன்னெடுத்துள்ளேன். 

ஐந்திரம்: தமிழில் 'ஐந்திரம்;' என்று வழங்கப்படுகிற சொல் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற திரண்ட ஆற்றல்களுக்கான பொதுச் சொல் ஆகும். 

தமிழில் உள்ள பெரிய என்ற ஒப்பீட்டுச் சொல்லை வியந்த பிராமணியர்கள் அதை பிர என்று சமஸ்கிருதத்தில் ஒலிமாற்றம் செய்து, உயர்த்திப் பிடிக்கும் வகைமைகளுக்கான பிரபலம், பிரமாண்டம், பிரசாதம், பிரணவம், பிரதமர், போன்ற நிறைய சொற்களை சமஸ்கிருத்ததில் உருவாக்கிக் கொண்டார்கள். 

அந்த வகையில் தமிழன் கண்ட ஐந்திரத்திற்கும் ஒரு சொல்லை உருவாக்கினார்கள். அந்தச் சொல்தான் பிரபஞ்சம். இதற்குப் பெரிய ஐந்து என்று பொருள். 

அவர்கள் மொழிமாற்றிய பிரபஞ்சம் என்ற சொல்- நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திர ஆற்றல்களை குறிக்க பெரும்பாலும் பயன்படுத்த படாமையாலும், பிரபஞ்சம் என்பது பேரண்டப் பெருவெளி என்பது மட்டுமானது போலவும் புரிந்து கொள்ளப்பட்ட நிலையில், பிராமணியர்கள் ஐந்திரத்திற்கு மொழிமாற்றம் செய்த இன்னொரு சொல் பஞ்ச பூதமாகும். 

இன்றைய தமிழர்களும் ஐந்திரத்தை பஞ்ச பூதம் என்ற சொல்லாலேயே வழங்கி வருகின்றனர்.

கட்டிடக்கலை சிற்பக்கலையில் வல்லவரான மயன் என்கிற பழந்தமிழ்க் கலைஞனை பிராமணியரும் கொண்டாடி வருகின்றனர். மயன், ஐந்திரம் என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியுள்ளதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. 

பனம்பாரானரின் தொல்காப்பிய பாயிரத்தில் தொல்காப்பியர் ஐந்திரத்தைக் கற்றுத் தேர்ந்தவர் என்ற செய்தி தெரிவிக்கப்படுகிறது. 

சிலப்பதிகாரத்தில் விசும்பு ஆற்றல் குறித்து, தெளிவான கருத்துக்கள் பொதிந்த விழுமிய நூல் ஐந்திரம் என்று பேசப்படுகிறது.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிற வகைக்கே தமிழ் முன்னோர், தமிழின் ஒவ்வொரு சொல்லையும் ஆய்ந்து ஆய்ந்து நிறுவியுள்ளனர். ஆக எந்தத் தலைப்பின் விரிவையும் அந்தச் சொல்லை ஆய்வு செய்து மீட்டுவிட முடியும். 

அந்த வகையில்தான் பல நூறு தமிழ்ச் சொற்களின் வரையறைகள் மீட்புக்கான இந்தப் பணியை நான் உறுதியோடு தொடர்ந்து வருகின்றேன்.

ஐந்திரத்தில் உள்ள ஐந்து எவை என்கிற கேள்விக்கான விடை திரங்கள் ஆகும். ஆக, 'திரம்' என்றால் என்ன என்கிற ஆய்வு நமது ஐந்திரத்தின் வரையறையை நிறுவுவதற்கு நமக்கு முழுமையான செய்தியை மீட்டுக் கொடுத்துவிடும்.

திரட்சி, திரள், திரண்ட, என்கிற தமிழ்ச் சொற்களில் இருந்து திரம் என்பது திரண்டிருக்கிற என்று பொருள் தருகிற சொல்லாகும். அந்த திரண்டிருக்கிற ஆற்றல்கள், திறந்தால் வெளிப்படுவது திறன் என்ற சொல்லால் நாம் அறிய முடிகிற நிலையிலும், 
அடிப்படையில் திரம் ஐந்து மட்டுமே என்று உறுதிப்பாடாக சொல்லப்படுகிற சொல் ஐந்திரம் என்கிற நிலையிலும்- தமிழர் அடிப்படை ஆற்றல்களாக கொண்டாடி வரும் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திர ஆற்றல்களே ஐந்திரம் என்று தமிழர் நிறுவியிருந்தனர் என்று நாம் ஐந்திரத்தை மீட்டெடுக்க முடியும். 

ஐந்திரத்திற்கு தமிழில் நெடிய தொடர்ச்சி இருக்கிறது. ஐந்திரம் தமிழியலில் வேராக இருக்கிறது.

உலகினர் போல் ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று தேடியலைகிற நாடோடி வாழ்க்கையைத் தமிழ்முன்னோர் முன்னெடுத்திருக்கவில்லை. 

மாறாக- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என்கிற ஐவகை மண்ணில்
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை  வாழிய நிலனே
என்று வாழ்ந்த, எந்த வகை மண்ணையும் திருத்தி வாழ்ந்த, நிலைத்த வாழ்க்கையினர் தமிழ்முன்னோர்.

அந்த ஐவகை மண்ணில் மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி, புவியில் இருந்து, உயர்ந்து வளர்ந்திருக்கிற காரணம் பற்றி, அது ஐந்திரங்களில் விசும்பு என்கிற திரம் தொடர்பானது.

காடும் காடு சார்ந்த முல்லை இயல்பிலேயே வளம் கொண்ட காரணம் பற்றி அது ஐந்திரங்களில் நிலம என்கிற திரம் தொடர்பானது.

வயலும் வயல் சார்ந்த மருதம் நீர்மேலாண்மையை அடிப்படையாகக் கொண்ட காரணம் பற்றி அது ஐந்திரங்களில் நீர் என்கிற திரம் தொடர்பானது.

திருவள்ளுவர் தெரிவிக்கிற தண்நீர்மை குன்றா கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தலுக்கு காற்றே முதன்மை என்கிற காரணம் பற்றி அது ஐந்திரங்களில் காற்று என்கிற திரம் தொடர்பானது.

சுரமும் (வறட்சி) சுரம் சார்ந்த பாலை ஐந்திரங்களில் தீ என்கிற திரம் தொடர்பானது.

அகப்பொருள் இலக்கணம் முழுக்க முழுக்க குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்கிற ஐந்திணைகளை அடிப்படையாகக் கொண்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடவுள்! எங்கே, எப்போது, ஏன், உருவாகிறது? இயல்கணக்கில் தமிழியல் தெளிவுபடுத்துவது என்ன

குடும்பம் தமிழர்களுக்குச் சொந்தமானது. கூட்டுக் குடும்பம் அல்ல

மறுபிறப்பு